‘புதிய ஜனநாயகம்‘ ஜனவரி 2009 இதழில் தோழர் சுடர் எழுதிய கட்டுரையை மறுக்கும் ரவிக்கு ஒரு வார்த்தை. 2009 பிப்ரவரி மாத ‘காலச்சுவடு‘ இதழை அவசியம் படியுங்கள். ஏனெனில் அந்த இதழைத்தான் நீங்கள் ஆதாரப்பூர்வமாக நம்புகிறீர்கள். நீங்கள் சிலாகித்து பேசும் சங்கீதா ஸ்ரீராம், பசுமைப் புரட்சி குறித்து இந்த இதழில் என்ன எழுதியிருக்கிறார் என்று ‘நேரம் கிடைக்கும்போது‘, ‘மேய்ந்து‘விட்டு வாருங்கள்.
நீங்கள் சொல்லும் ‘குமரப்பா’ என்ன சொல்லியிருக்கிறார் என படியுங்கள்; மகிழுங்கள்!
முதல் இரண்டு பகுதிகள்:
ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1
ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 2
இனி, 3ம் பகுதி:
1960ம் ஆண்டு நார்மன் போர்லாக், ரோமில், ஐ.நா. சபை அதிகாரிகள் மற்றும் இதர அறிவியல் அறிஞர்களிடையே பேசும்போது, தான், மெக்சிகோவில், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வரும் வேளாண் – பொருளாதார வல்லுனர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை நிறுவப் போவதாக குறிப்பிட்டார். உண்மையான மத வழக்கப்படி, நார்மன் போர்லாக் இதை, ‘கோதுமை அடியார்களுக்கான செயல்முறைப் பள்ளி‘ என்று அழைத்தார்.
இந்த திட்டத்துக்கு ராக்பெல்லர் நிறுவனம் நிதியளிக்க, உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் சர்வதேச அங்கீகார முத்திரையளிக்க, மெக்சிகோ அரசு இதர வசதிகளை அளித்தது.
இதனை தொடர்ந்து 1963 – 64ல் தனது ‘ஆன்மிக குரு’வான போர்லாக்கை இந்தியாவுக்கு வரவழைத்தார் எம்.எஸ். சுவாமிநாதன். அப்படி வந்த போர்லாக், ‘சந்திக்க’ வேண்டியவர்களை சந்தித்துவிட்டு, ‘வீர உரை’களையும் நிகழ்த்திவிட்டு சென்றார். சென்றதுமே இந்தியாவில் ஆய்வு செய்வதற்காக, ஓரளவு குட்டையான 400 கிலோ பயிர்வகைகளை அனுப்பி வைத்தார்.
நார்மன் போர்லாக்கின் விசுவாசம் + திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் 1970ம் ஆண்டு, ‘சத்துணவை பொறுத்தவரை ஒரு புதிய உலக சூழலுக்கு’ வித்திட்டதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது!!!
போர்லாக் அனுப்பிய பயிர் வகைகளை கொண்டு போதுமான ஆய்வுகளை நிகழ்த்திவிட்டதாக உணர்ந்த ரால்ப் கம்மிங்ஸ், இந்தியாவில் இதை ‘பெரிய அளவில்’ அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். இதற்காக அப்போதைய இந்திய வேளாண் அமைச்சரான சி. சுப்பிரமணியத்தை அணுகினார். சி. சு.வுக்கு கம்மிங்ஸின் ‘ஆலோசனைகள்’ பிடித்திருந்தன. இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்த சி. சு. ஒப்புக் கொண்டார்.
ஆனால், பொருளாதார வல்லுநர்களான பி.எஸ். மின்ஹாசீம், டிஸ். சீனிவாஸ் ஆகியோர் இந்தக் கொள்கையை எதிர்த்தனர்.
1966ம் ஆண்டு வந்த பெரும் வறட்சி இந்திய உணாவு உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில் அமெரிக்காவில் இருந்து முன் எப்போதும் இல்லாத வகையில் உணவு தானியங்கள் வந்து இறங்கின. இது உணவுச் சார்பு, புதிய கொள்கை வடிவமைக்கப்பட வழி வகுத்தது.
அப்போது அமெரிக்க அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன், குறுகியகால அடிப்படையில் கோதுமையை அனுப்பி வைத்தார்.
ஆனால், இந்திய வேளாண்மை அசைச்சரான சி. சுப்பிரமணியத்துக்கும், அமெரிக்க வேளாண்மைச் செயலாளர் ஆர்வில் பிரிமேனுக்கும் இடையே பசுமைப் புரட்சி உடன்படிக்கை கையெழுத்தாகும் வரை, அமெரிக்க அதிபர் ஒரு மாத காலத்துக்கு மேல் உணவு மானியம் அளிப்பது குறித்து எந்தவிதமான உறுதி மொழியையும் அளிக்க மறுத்துவிட்டார் என்பதை நினைவில் கொள்க!
இதன் இறுதிப் பகுதி நாளை வெளியாகும். அதில், ரவி சீனிவாஸ் குறிப்பிட்டுள்ள,
//1983ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை அப்போதிருந்த இல்லஸ்டேரட் வீக்லியில் எழுதிய கட்டுரை மூலம் பலர் அறியச் செய்தார்.//
கிளாட் ஆல்வரிஸ் பற்றி எழுதுவதாக இருக்கிறேன். காரணம், எஸ். வி. ராஜதுரையும் இதில், இந்த கிளாட் ஆல்வரிஸுடன் சம்மந்தப்பட்டிருக்கிறார்! இதைக் குறித்து ‘புதிய ஜனநாயகம்’ 3ம் ஆண்டு இதழ்களிலேயே தோழர் ஆர். கே. விரிவாக எழுதியிருக்கிறார்!!!
மறுமொழியொன்றை இடுங்கள்