சாரு மஜூம்தார்… இது ஒரு தனிப்பட்ட நபரின் பெயர் மட்டுமே அல்ல. இந்தப் பெயருக்கு பின்னால் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பெயர் உணர்த்தும் வரலாறும், எழுச்சியும் சாதாரணமானவை அல்ல. அதிகாரத்துக்கு எதிரான குரலாகவும், தன்மானம் – சுயமரியாதைக்கு அர்த்தமாகவும், உரிமையை நிலைநாட்ட போராடும் உத்வேகத்தையும் அளிக்கும் வார்த்தையாக இந்தப் பெயர்தான் இருக்கிறது. சொல்லப்போனால் இந்தப் பெயருக்கு பின்னால்தான் இந்த நாட்டின் புரட்சியே அடங்கியிருக்கிறது.
நக்சல்பாரி – என ஆளும்வர்க்கமும், பன்னாட்டு முதலாளிகளும் இன்று மட்டுமல்ல, இனி எத்தனை நூற்றாண்டுகளானாலும் பயத்துடன் உச்சரிக்கப் போகிறார்களே… அந்த ‘நக்சல்பாரி‘ என்ற சொல்லுக்கு பின்னால் நிற்கும், இருக்கும் மனிதர், இந்த சாரு மஜூம்தார்.
1968ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டணி அரசில் கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்றிருந்த போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து ஒரு குரல் சீறி வெடித்தது. அந்தக் குரல் சாருமஜூம்தாருடையது. கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த இவரது குரலை அவரது கட்சியே எதிர்பார்க்கவில்லை. பணக்காரர்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்கி ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். விவாசாயிகளே நேரடி நடவடிக்கையில் ஈடு பட்டு தங்களின் நிலத்தை பணக்காரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள்… என அதிரடியாக சாரு அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது.
சரி, அழித்தொழிப்பு நடவடிக்கையில் சாரு மஜூம்தார் ஏன் இறங்கினார்? இப்படியொரு முடிவுக்கு அவர் வர என்ன காரணம்?
1967 மார்ச் 2ம் தேதி. அதே நக்சல்பாரி கிராமம். அங்குதான் விமல் கேசன் என்ற ஆதிவாசி இளைஞர் வசித்து வந்தார். தனது நிலத்தை விமல் கேசன் உழுவதற்கு அந்தப்பிரதேச நீதித்துறை அனுமதி வழங்கியது. ஆனால், அந்தக்கிராம நிலச்சுவாந்தர்கள், நில உரிமையாளர்கள், விமல் கேசனை தனது நிலத்தில் உழுவதற்கும், உரிமை பாராட்டவும் அனுமதிக்காமல் அவரை அடித்துத் துன்புறுத்தினர்.
இதைப் பார்த்து ஆதிவாசிகளும் விவசாயிகளும் கொதித்து எழுந்தார்கள். ஏற்கனவே அங்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சாரு மஜும்தார், தீவிரமான ஒரு கிளர்ச்சிக்கு தயாரானார். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். விமல் கேசனுடைய நிலத்தை மட்டுமல்ல, தாங்கள் பறிகொடுத்த அனைத்து நிலங்களையும் சாரு மஜும்தாரின் தலைமையில் நக்சல்பாரி மக்கள் மீட்டெடுத்தனர்.
கிளர்ச்சி 72 நாட்கள் தொடர்ந்தது. ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒன்பது விவசாயிகள் அல்லது ஆதிவாசிகள் இந்தக் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டனர். நக்சல்பாரி மக்களின் அந்தக் கிளர்ச்சியே பின்னாட்களில் நிலச்சுவாந்தர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் தத்துவங்களுக்கும் பெயராகவும் அமைந்தது.
இப்படித்தான் ‘வசந்தத்தின் இடிமுழக்கம்‘ தோன்றியது.
ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22ம் தேதி கல்கத்தவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நீண்ட கால மக்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்தி மார்க்ஸ்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சியை சாரு மஜூம்தார் தொடங்கி, இன்றுடன் 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.
அவரது தலைமையின் கீழ் தமிழகத்திலும் புரட்சிகர மா – லெ குழு தோன்றியது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், தடங்களையும் அவ்வளவு சுலபத்தில் யாராலும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.
சாருமஜூம்தார் தமிழகத்துக்கு 2வது முறையாக வந்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் துரிதம் தேவை என அறிவித்த பிறகு பரவலாக பலர் அழிதொழிக்கப்பட, கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்பு காவல்துறையினரால் வேட்டையாடப்பட்டார். நக்சல்பாரிகள் சந்தித்த முதல் இழப்பும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பும் அதுதான். தோழர் கோதண்டராமன் போன்ற பக்குவம் மிக்க தலைவர்கள், சாரு மஜூம்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தங்கள் வேலையை விட்டுவிட்டு கிராமங்களுக்கு சென்றார்கள்.
அதுவும் எப்படிப்பட்ட வேலை? தொழிற்சங்கத்தின் ஆணிவேராக அல்லவா தோழர் கோதண்டராமன் விளங்கினார்? தொழிற்சங்கத்தை கட்டுவது எளிதான விஷயமல்ல, என்பது அமைப்பை கட்டுபவர்களுக்கு தெரியும். அப்படி கட்டி எழுப்பிய சங்கத்தை அப்படியே போட்டுவிட்டு தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். பின்னர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்று மட்டும் அவர் அழித்தொழிப்பு செயலில் இறங்காமல், தன்னிடமிருந்த தொழிற்சங்கத்தை வைத்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால்..? பரவசமான கனவுதான். ஆனால், நடக்காமலேயே போய்விட்டது. அவரால் கட்டப்பட்ட தொழிற்சங்க அமைப்பை அதன்பின், வலது – இடது போலி கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். சரி, அது முடிந்த கதை. தமிழக நக்சல் தடத்துக்கு வருவோம்.
தோழர் அப்புவை தொடர்ந்து சீராளன், பாலன், கோவிந்தன், கண்ணாமணி போன்றோர் அடுத்தடுத்து போலீஸ் மோதலில் பலியாகி விழுந்தார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் காவல்துறை அதிகாரியான தேவாரம் தலைமையில் நக்சல்பாரிகள் நரவேட்டையாடப்பட்டார்கள். இதில் புரட்சியாளர்களைவிட, பல அப்பாவி பொதுமக்கள்தான் பலியானார்கள். பிடிபட்ட புரட்சியாளர்கள் காவல்நிலையத்தில் சந்தித்த கொடுமைகளை எழுத்தில் வடிக்க முடியாது. ரத்தத்தில் தோய்ந்த வரலாறு அது.
தமிழ் புதின உலகில், இந்தி எதிர்ப்பு வரலாற்றை போலவே இந்த நக்சல்பாரி எழுச்சியும் இரட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் என்ன, என்றுமே அழியாதபடி மக்களின் மனதில் தங்கிவிட்டது. இன்றும் தர்மபுரி, வடாற்காடு மாவட்ட கிராமங்களுக்கு சென்றால் வாய்மொழி கதைகளாக அவ்வளவு நிகழ்வுகளை கேட்டறியலாம்.
இப்படியான கொந்தளிப்பும், அடக்குமுறையும் ஆளும்வர்க்கத்தினரால் கட்டவிழ்க்கப்பட்ட சூழலில், நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கிய சாருமஜூம்தார், 1972ம் ஆண்டு காவல்துறை மோதலில் கொல்லப்பட்டார். அவருடன் நக்சல்பாரி இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஆளும் வர்க்கம் ஆனந்தக் கூத்தாடியது. ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இதன் பிறகுதான் நடந்தது என்பது அப்போதும் சரி, இப்போதும் சரி அது அறியவில்லை. கிள்ளுக்கீரையாக நக்சல்பாரிகளை பிடுங்கிவிடலாம் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கிறது. ஆனால், பிடுங்கி எறியவும், வெட்டிப் போடவும் நக்சல்பாரிகள் ஒன்றும் கோழைகள் அல்லவே. அவர்கள் போராளிகள். இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சரி, சமூக மாறுதல் ஏற்படும் வரை, சோஷலிசம் உருவாகும் வரை இந்த நக்சல்பாரி விதை முளைத்து கிளை பரப்பிக் கொண்டேதான் இருக்கும்.
மார்க்ஸிய – லெனினிய கொள்கையே புரட்சிக்கான வழி. அதில் எப்போதுமே யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான வழிமுறைகளில் மாற்றம் தேவை என்ற சுய பரிசீலனைக்கு, சாரு மஜூம்தாரின் மறைவுக்கு பிறகு, மா – லெ குழுக்கள் வந்தன. அதனால்தான் அவரது அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.
‘நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள். விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள். பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள். நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ, அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள். முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள். இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு. ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்…’
என நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு எஸ்.ஒ.சி என்றழைக்கப்படும் மார்க்ஸிய – லெனினிய சித்தாந்த அடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியை நிறுவினார்கள். ஆயுதங்களை சுமந்து திரியும் சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய் மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்ட ஆரம்பித்தார்கள். அணி திரட்டியும் வருகிறார்கள். மகஇக இந்த வழிமுறையுடன்தான் (நான் அப்படித்தான் நம்புகிறேன் – சூன்யம்) வீறுநடை போடுகிறது.
என்றாலும் தோழர் சாரு மஜூம்தார் என்றுமே மரியாதைக்கு உரியவர். அப்படிப்பட்டவரின் புகழ்பெற்ற எட்டு ஆவணங்களை ‘மனிதன்’ பதிப்பகம் தமிழில் கொண்டு வந்திருக்கிறது.
இந்த ஆவணங்கள் இன்றும் பொருந்தக் கூடியதா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். ஆனால், என்றைக்குமே ஒரு வரலாற்று கட்டத்தில் முன்வைக்கப்படும் ஆவணங்கள் எல்லாக் காலத்துக்கும் எப்போதும் பொருந்தும் என்று யாராலும் கூற முடியாது. இதை நினைவில் கொள்வது நல்லது. இன்று புரட்சிகர அணிகளில் பல பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் இந்த ஆவணங்களிலுள்ள சில விஷயங்கள் இன்றும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.
உதாரணாமாக, இந்தியா ஒரு அரைக்காலனிய – அரை நிலவுடமை நாடு என்ற வரையறுப்பும், இதுபோன்ற நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் – விவசாயிகள் கூட்டை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஜனநாயகப் புரட்சியே சாத்தியம் என்ற துணிபும், அது நீண்ட கால மக்கள் யுத்தப் பாதையின் மூலம் நிறைவேற்றப்படும் என்ற வழிகாட்டலும் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே.
அதேபோல் இந்திய அரசமைப்பு மேலும் மேலும் பாசிசமயமாக்கப்பட்டு வரும் சூழலில், சமுதாய மாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய கட்சி ரகசியமாக செயல்படுவது இன்றியமையாததாகும். அந்தவகையில் ரகசிய கட்சியின் அவசியத்தை வலியுறுத்திய சாரு மஜூம்தாரின் கருத்து இன்றைக்கும் பொருந்தும் அல்லவா?
நக்சல்பாரிகள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும் இந்த ஆவணங்கள் பயன்படும்.
‘வரலாற்று முக்கியத்துவமிக்க எட்டு ஆவணங்கள் (1965 – 67)’, சாரு மஜூம்தார், மனிதன் பதிப்பகம், வரகூர், அண்ணாமலைநகர், சிதம்பரம் – 608002.பக்கம்: 96, விலை: ரூ: 50,
ஜனவரி 29, 2009 இல் 10:30 முப
//தமிழ் புதின உலகில், இந்தி எதிர்ப்பு வரலாற்றை போலவே இந்த நக்சல்பாரி எழுச்சியும் இரட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் என்ன, என்றுமே அழியாதபடி மக்களின் மனதில் தங்கிவிட்டது. இன்றும் தர்மபுரி, வடாற்காடு மாவட்ட கிராமங்களுக்கு சென்றால் வாய்மொழி கதைகளாக அவ்வளவு நிகழ்வுகளை கேட்டறியலாம். //
தோழர் சுனிதிகுமார் கோஷ் தமது ‘லிபரேசன்'(1967 கட்சிப் பத்திரிக்கை) இதழ்களின் தொகுப்பு நூலின் இறுதிப் பகுதியில் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பை எழுதியிருப்பார். அதில் தமிழ்நாடு பகுதியில் துரதிர்ஷ்டவசமாக குறிப்பிடத்தக்க தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என எழுதியிருந்தார்.பல ஆண்டுகளாக இந்த எண்ணம் எனக்குள் எழும்பிக் கொண்டேயிருக்கிறது. அந்த வாய்மொழிக் கதைகளை யாரேனும் பதிவு செய்தால் எவ்வளவு மதிப்புமிக்கதாக இருக்கும்?
இராண்டாண்டுகளுக்கு முன்பு, சீராளன் படுகொலை செய்யப்பட்டு 29 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் சீராளனின் அம்மாவிற்கு 1.2 இலட்சம் இழப்பீடு வழங்கியது. அந்தச் செய்தியில் போகிறபோக்கில் குறிப்பிடப்படும் இறுதி வரிகள் ரத்தம் தோய்ந்த காலத்தை கண்முன் எழுப்புகின்றன.
Seeralan was being held in police custody without any remand in 1977 when he was beaten to death with a yoke. While the police claimed that he was killed “in self-defence,” a probe revealed the use of excessive force and denial of medical aid.
In 1986, however, the North Arcot District Sessions Court acquitted the police personnel of all charges, concluding Seeralan was killed in self-defence. The state government did not challenge the ruling.
ஜனவரி 29, 2010 இல் 7:39 முப
தென் அமெரிக்க நாடான உருகுவேயில் சமீபத்தில் நடந்த தேர்ந்தலில் வென்று ஜனாதிபதியான ஒரு முன்னாள் மார்கிசிய போராளியான முஜிக்காவின் இன்றைய நிலைபாடு பற்றிய சுட்டி இது :
http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm
A new beginning
How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists, says India’s Ambassador to Argentina, Uruguay and Paraguay R.
VISWANATHAN.
In one of his campaign speeches, Mujica vowed
to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United
States.” He said, “I’ll shout it if they want: Down with isms! Up with
a Left that is capable of thinking outside the box! In other words, I
am more than completely cured of simplifications, of dividing the
world into good and evil, of thinking in black and white. I have repented!”
உங்களைப் போன்றவர்கள் அவசியம் படிக்க வேண்டும் இதை. Marxism, Maoisim இன்று எத்தனை தூரம் relevant and credible என்பதை பற்றி ஒரு முன்னால் மாவோயிஸ்ட்டின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் இவை..